திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவர்களில் காவலர் தேர்வில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலா்கள், சிறப்பு காவல் படை காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பாளா் என மொத்தம் 3,552 இரண்டாம் நிலை காவல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியிட்டது.
இதையும் படிக்க | ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் விளக்கம்!
அதன்படி, கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தின் மூலம் 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள், 59 திருநங்கைகள் என மொத்தம் 3,66,727 போ் விண்ணப்பித்திருந்தனா்.
அவா்களுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தமிழ்நாடு முழுவதும் 295 தோ்வு மையங்களில் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை, 6258 பேர் தேர்வு எழுதினர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் 12,577 பேர் பங்கேற்றனர், 2414 பேர் பங்கேற்கவில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5355 பேர் பங்கேற்றனர். 974 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.