தெலுங்கானாவில் அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும் என்றும் ஒருவேளை சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டால் அந்த மசூதிகளை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்து ஏக்தா யாத்திரையில் பங்கேற்றுப் பேசிய பண்டி சஞ்சய் குமார், 'மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மசூதிகளையும் தோண்டி எடுப்போம். சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம். ' என்று க்கு சவால் விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், 'தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். பாஜகவும் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதுபோல தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். 'ராம ராஜ்ஜியம்' வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம்.
ஏனெனில் இஸ்லாமியர்களின் கல்விக்கூடமான 'மதரஸாக்கள்' பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மாறியிருப்பதால் அவர்களை அடையாளம் காண வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் அனைத்து மதரஸாக்களும் மூடப்படும்.
தெலங்கானாவில் இந்து சமுதாயத்தை ஒன்றிணைப்பதற்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்' என்று பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்கக் கோரிய வழக்கு வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஞானவாபி சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்த மனு: விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்