சிவசேனை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே விரைவில் மும்பை வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டியிலுள்ள ரேடிசன் புளூ விடுதியில் முகாமிட்டுள்ளார். முதலில் 22 எம்எல்ஏக்களுடன் அங்கு சென்றார். அதன் பின், மேலும் சில எம்எல்ஏக்கள் ஷிண்டேவின் அணியில் இணைந்துகொண்டனர்.
தற்போது மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே “நாங்கள் சிவசேனையில் தான் இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அக்கட்சியை முன்னெடுத்துச் செல்ல விரைவில் மும்பை வருவோம். எனக்கு 50 எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். யாரும் வற்புறுத்தலின் பேரில் அழைத்துவரப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிவசேனை கட்சியின் எம்.பி சஞ்சய் ரௌத் 'அதிருப்தி எம்எல்ஏக்களில் இன்னும் சில பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் மீண்டும் எங்களிடம் திரும்புவார்கள் என்று நம்புகிறோம்' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.