இந்தியா

நூபுர் சர்மா விவகாரம்; உச்சநீதிமன்றத்தின் கருத்து- முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

DIN

பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகம் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் இணைத்து விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நூபுர் சர்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அவர் மீது கடந்த 1ஆம் தேதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. அவரது உளறல் பேச்சு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீவைத்து விட்டதாகவும் நாட்டில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இக்கருத்து தொடர்பாக 15 முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள், 77 முன்னாள் அகில இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், 25 முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி க்ஷிதிஜ் வியாஸ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஆனந்த் போஸ், ஆர்.எஸ்.கோபாலன், முன்னாள் டிஜிபிக்கள் எஸ்.பி.வைத், பி.எல்.வோரா, முன்னாள் ராணுவ அதிகாரிகளான வி.கே.சதுர்வேதி, எஸ்.பி.சிங் உள்ளிட்ட 117 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நூபுர் சர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தெரிவித்துள்ள துரதிருஷ்டவசமான கருத்துகள் நீதிமன்ற சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் உகந்ததாக இல்லை. இக்கருத்துகள் உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கருத்துகள் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நீதி பரிபாலன அமைப்பில் அகற்ற முடியாத வடுவை ஏற்படுத்தி விட்டன. நீதிமன்ற உத்தரவில் இடம்பெறாத இந்தக் கருத்துகளை நீதிமன்ற உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், அனைத்து அமைப்புகளும் அரசியல் சாசனப்படி தங்கள் கடமையை ஆற்றும்போதுதான் எந்த நாட்டின் ஜனநாயகமும் தழைத்திருக்கும் என்ற நாங்கள் நம்புகிறோம்.
உச்ச நநீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் லட்சுமண ரேகையைத் தாண்டி விட்டன. அதற்கு எதிராக அறிக்கை வெளியிடுமாறு அவை எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டன. நீதிபதிகள் தங்கள் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
உச்சநீதிமன்றத்திடம் நூபுர் சர்மா நீதியைக் கோரியிருந்தார். அவரது மனுவில் எழுப்பப்பட்டிருந்த விஷயத்துக்கும் நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அக்கருத்துகள் நீதிபரிபாலன அமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறுவதாக அமைந்துள்ளன.
நூபுர் சர்மாவுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கச் செய்வது மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகள், உதய்ப்பூரில் ஒருவர் தலையை துண்டித்துக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் உள்ளன. ஒரு முதல் தகவல் அறிக்கை என்பது கைதுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டு சட்ட நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற அமைப்புகள் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளும் கவலை அளிப்பதாக உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT