மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.
கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் 70 பேர் பயணம் செய்த பேருந்து மதியம் 2.30 மணியளவில் இங்கிலீஷ் பஜார் பிளாக்கில் உள்ள லக்கிபூர் பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 13 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் யாதவ் கூறினார்.
5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மால்டா-மணிக்சாக் மாநில நெடுஞ்சாலையில் நடந்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவர்களை மீட்க உள்ளூர்வாசிகள் விரைந்துள்ளனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.