உதய்பூர் படுகொலையில் கொலையாளிகள் தப்பித்து செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தின் எண் மும்பை தீவிரவாதத் தாக்குதலை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் தரப்பில் கூறியிருப்பதாவது: “ உதய்பூர் கொலையாளிகள் இருவரும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி அதிக விலை கொடுத்து 2611 என அமைந்துள்ள இருசக்கர வாகன எண் தான் வேண்டும் என வாங்கியுள்ளார். இந்த வாகன எண் மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்த தினத்தை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.” என்றனர்.
இதையும் படிக்க: உதய்பூர் தையல்காரரைக் கொன்றவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவரா? வெளியான புகைப்படங்கள்!
இந்த வாகன எண்ணை பெறுவதற்காக ரூ.5000 அதிகம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உதய்பூரில் கொடூரமான கொலை சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு கொலையாளிகள் இருவரும் இந்த நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கொலையாளிகள் இருவரும் உதய்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராஜ்சமந்த் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் தற்போது உதய்பூரில் உள்ள தான் மண்டி காவல் நிலையத்தில் உள்ளது.