மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி சிவசேனை எம்எல்ஏக்கள் எட்டு நாள்களாக தங்கியிருந்த குவாஹாட்டி நட்சத்திர விடுதிக் கட்டணம், அவர்கள் கிளம்பும் முன்பே செலுத்தப்பட்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், எட்டு நாள்களுக்கான விடுதிக் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து விடுதி நிர்வாகமோ, ஊழியர்களோ யாருமே வாய்திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?
கோட்டாநகரில் அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சுமார் 68 முதல் 70 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்தியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்காக, பல்வேறு தளங்களில் சுமார் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்கள் அங்கு தங்கியிருந்த நாள்களில், நட்சத்திர விடுதியின் உணவகம் மூடப்பட்டது. வெளி ஆள்களுக்கும் அறைகள் ஒதுக்கப்படவில்லை.
"சாதாரண விருந்தினர் போலவே, மகாராஷ்டிர எம்எல்ஏக்களும் தங்கியிருந்தனர். அவர்கள் கிளம்பும் முன்பே, அனைத்துக் கட்டணததையும் செலுத்திவிட்டனர். எந்தக் கட்டணமும் பாக்கி வைக்கப்படவில்லை" என்று நட்சத்திர விடுதியின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
விடுதிக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை குறித்து தெரிவிக்க இயலாது என்று கூறிவிட்ட நிர்வாகம், அவர்கள் பல்வேறு கட்டணங்களைக் கொண்ட அறைகளை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.