புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கதக் நடனத்தில் புகழ்பெற்றவரான பண்டிட் பிர்ஜு(83) மகாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(திங்கள்கிழமை) காலமானார். சீறுநீரகப் பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த பிர்ஜு நேற்று பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பிர்ஜுவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. மேலும், 'விஸ்வரூபம்' படத்திற்காக கமல்ஹாசனுக்கு கதக் கற்றுக் கொடுத்ததுடன் படத்தில் வரும் ‘உனைக் காணாத’ என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜுதான் வடிவமைத்துள்ளார்.
கதக் நடனக் கலைஞர் பிர்ஜுவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் கலைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர், வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார். பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.