குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர்,
தில்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களைப் பிடித்து அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெற்றி மட்டும் இல்லாமல், தில்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 வருட ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி சரியான ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
இருப்பினும், கருத்துக்கணிப்பின்படி, குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடையும் என்றும், அதன் முடிவுகள் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறுப்பு அரசியலை மக்கள் விரும்புவதில்லை என்றும், பள்ளிகள், மருத்துவமனைகள், தூய்மை, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்குத் தீர்வு காணவே மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். அதன் முடிவு தில்லி மாநகராட்சி தேர்தல் முடிவில் தெரியவந்தது.
குஜராத்தில் பாஜக களமிறங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்தநிலையில், நாளை வெளியாகும் குஜராத் தேர்தல் முடிவுகளில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ஆம் ஆம் வெற்றி வாகை சூடும் என்றார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போது மீண்டும் நான் உங்களுடன் இருப்பேன். முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும். வாக்குக் கணிப்புகள் குஜராத்தில் தவறானவை என்பதை நிரூபிக்கும். கட்சி அலுவலகம் சென்று தொண்டர்களுடன் கொண்டாடுவேன் என்றார் மான்.