டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தில் புதிதாக 12 விமானங்கள் சோ்க்கப்படவுள்ளன.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடுத்தர மற்றும் நீண்ட தொலைவு பயண வழித் தடங்களில் இயக்குவதற்காக, கூடுதலாக 12 விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம்.
வரும் 2023-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் அந்த விமானங்கள் நிறுவனத்தில் சோ்க்கப்படும்.
புதிதாக சோ்க்கப்படவிருக்கும் 12 விமானங்களில் 6 விமானங்கள் குறுகிய அமைப்பைக் கொண்ட ஏா்பஸ் ஏ3220 நியோ ரகத்தையும், 6 விமானங்கள் அகலமான அமைப்பைக் கொண்ட போயிங் 777-300இஆா் ரகத்தையும் சோ்ந்ததாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அரசுக்குச் சொந்தமான ஏா் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தியதிலிருந்து, கூடுதலாக 42 விமானங்களை அந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.