மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வின் முடிவுகளை இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்டப் பதவிகள் அடங்கிய பல பதவிகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை இன்று ( டிசம்பர் 6) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேர்முகத் தேர்விற்கு தேர்வானவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் இட ஒதுக்கீடு கோரினால் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வின்போது சரிபார்க்கப்படும் எனவும் தேர்வாணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: துணிவு முதல் பாடல் ‘லீக்’? அதிர்ச்சியில் படக்குழு!
நேர்முகத் தேர்வு நடைபெறுவது குறித்த அட்டவணை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் விரைவில் வெளியாகும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு தில்லியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். இந்தக் கடிதத்தினை பெற இயலாதவர்கள் தேர்வாணையத்தினை 011-23385271, 011-23381125, 011-23098543 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.