குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதல்வர் புபேந்திர படேல், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுதன் காத்வி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
குஜராத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 63.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட தோ்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள், 285 சுயேச்சைகள் என மொத்தம் 833 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், பாஜகவும் ஆம் ஆத்மியும் 93 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 90 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் (44), பாரதிய பழங்குடியினா் கட்சி (12) உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.