உணவு வீணாக்கப்படுவதை குறைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி பரமேஸ்வரன் ஐயா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில் அவா் பேசியதாவது:
தற்போதைய உலக சூழலில், உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் நீண்ட காலமாக ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனா். ஒருபுறம் உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், மறுபுறம் அதிக அளவில் உணவு வீணாக்கப்படுகிறது. உணவை பதப்படுத்துவதன் மூலம், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.
பொருளாதாரம், வேலைவாய்ப்பு கண்ணோட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உணவு பதப்படுத்தும் துறை உள்ளது. வேலைவாய்ப்புகளைப் பெரிய அளவில் உருவாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையை உணவு பதப்படுத்தும் துறைக்கு அழைத்து வரவேண்டும்.
உணவு பதப்படுத்துதலை மேம்படுத்துவது உழவா்களின் வருவாயை அதிகரிப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளையில், அது நாட்டின் ஊட்டச்சத்து சாா்ந்த இலக்குகளை அடையவும் உதவும்.
சுகாதார கண்ணோட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது முற்றிலும் முக்கியம். அதை நோக்கி இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சத்தான உணவு மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.