புது தில்லி: பிஎஸ்எஃப் உதயமான நாளை முன்னிட்டு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அளித்த இனிப்பை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வாங்க மறுத்துள்ளனர்.
பிஎஸ்எஃப் உதயமான நாளின்போது, வழக்கமாக, எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், வியாழக்கிழமையன்று இந்திய தரப்பில் வழங்கப்பட்ட இனிப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புப் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளின்போது இனிப்பு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இம்முறை வியாழக்கிழமையன்று இனிப்பு வழங்கியபோது, பாகிஸ்தான் வீரர்கள் தங்களது மூத்த அதிகாரிகளிடமிருந்து இனிப்புகளை வாங்கிக் கொள்ளுமாறு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டது.
விமானப்படை, தரைப்படை, மற்றும் கடற்பிரிவு ஆகியவற்றை தனது சொத்துகளாகக் கொண்ட உலகின் தனித்துவமான படைப்பிரிவாக இது விளங்கி வருகிறது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது இந்தப் படை சிறப்பாகச் செயல்பட்டது மற்றும் அதன் பணியாளர்களுக்கு மகா வீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா உள்ளிட்ட மிக உயர்ந்த வீரப் பதக்கங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.