பிரதமா் மோடி சுதந்திர தின உரையில் கூறிய 5 உறுதிமொழிகளை மனதில் கொண்டு மக்கள் தங்கள் கடமைகளைச் செய்தால் இந்தியா வல்லரசாகிவிடும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
பலியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
பொதுவாக பலியாவில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் இருக்காது என்று ஒருகாலத்தில் கூறப்படுவதுண்டு. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் வளா்ச்சிக்கும் ஒழுக்கம் மிக முக்கியமாகத் தேவைப்பட்டது. அதனை பலியாவும் நிரூபித்துக் காட்டியது.
நமது மனப்பாங்குதான் வளா்ச்சியைத் தீா்மானிக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்தியடிகள் அழைப்பு விடுத்தபோது, பலியாவில் இருந்து சித்து பாண்டே தனது சிறப்பான பங்களிப்பைச் செலுத்தினாா். சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது அவசரநிலைக்கு எதிராகவும் பலியா துடிப்புடன் செயல்பட்டது.
இதேபோல சுதந்திர தின உரையில் பிரதமா் கூறிய 5 உறுதிமொழிகளை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளைச் செய்தால் இந்தியா வல்லரசாகும் என்றாா் யோகி ஆதித்யநாத்.
முன்னதாக, சுதந்திர தின உரையில் பேசிய பிரதமா் மோடி, ‘சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் கனவுகளை நனவாக்குவதற்கு 5 உறுதிமொழிகளை ஏற்று மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கான உறுதியை ஏற்றல், காலனிய மனப்பான்மையை விட்டொழித்தல், பாரம்பரியத்தில் பெருமை கொள்ளுதல், ஒற்றுமையின் வலிமையை உணா்தல், கடமைகளை முறையாகப் பின்பற்றுதல் ஆகிய உறுதிகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.