ஜம்மு - காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில், சித்ரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீரின் சோட்டிபோரா மாவட்டத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டித் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.