அசாமில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காக இறந்த பிறகும் ஒருவர் தண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு அசாமின் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதுல் சர்மா (65). இவருடைய மனைவி பிரணிதா தேவி. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இவருடைய மகன் பஞ்சாபில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதுல் சர்மா கடந்த செவ்வாயன்று தனது இல்லத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி தகனம் செய்ய எண்ணிய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் சிலர் இறந்தவரின் வீட்டிற்கு வந்ததுள்ளனர்.
ஆனால் அவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. காரணம், இறந்தவர் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இதனால் வேறு வழியின்றி சர்மாவின் உடலை அவரது சகோதரரும் மற்ற இரு உறவினர்களும் சேர்ந்து ஆற்றங்கரையில் அடக்கம் செய்தனர். இச்சம்பவம் குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவரவே அதுல் சர்மா வீட்டிற்கு அதிகாரிகள் இன்று சென்றனர்.
இதையும் படிக்க- நாட்டில் சில்லறைப் பணவீக்கம் 6.71% - ஆகக் குறைவு
அதைத்தொடர்ந்து, ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட சர்மாவின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதுல் சர்மாவின் குடும்பத்தினரின் விருப்பப்படி இந்து முறைப்படி இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதுல் சர்மாவின் உடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது. அதுல் சர்மா, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கடந்த 27 ஆண்டுகளாக அவரது குடும்பத்தை கிராமத்தில் ஒதுக்கி வைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காக இறந்த பிறகும் ஒருவர் அசாமில் தண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.