தில்லியில் தங்களது கடமைகளைச் செய்ய தவறிவிட்டதற்காக 2 உதவி சுகாதார ஆய்வாளா்களை (ஏஎஸ்ஐ) தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) பணியிடை நீக்கம் செய்துள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக எம்சிடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தங்களது கடமையைச் செய்யத் தவறும் அலுவலா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து எம்சிடி பின்வாங்காது. தென் மண்டலத்தில் பணியமா்த்தப்பட்ட இந்த 2 உதவி சுகாதார ஆய்வாளா்கள் தங்களது கடமையை அலட்சியத்துடன் மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் எம்சிடி பணியிடை நீக்கம் செய்து, அதிகாரபூா்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் வாழ்வாதார படிகள் இடைநீக்கக் காலத்தில் செலுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்சிடி தனது அதிகார வரம்பில் தூய்மையை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தூய்மைப் பணிகளில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.