காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
இப்போது, இரண்டாவது முறையாக அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிரியங்கா கரோனாவால் பாதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மீண்டும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவா்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு தொற்று தீவிரமானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அபிஷேக் மனு சிங்வி, பவன் கேரா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ராகுலின் பயணம் ரத்து: இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராகுல் காந்தி தனது ராஜஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளாா். ராஜஸ்தானின் அல்வாா் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் அவா் புதன்கிழமை பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. பிரியாங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், ராகுல் காந்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது பயணத்தை ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.