புராதன சிறப்புமிக்க மாமல்லபுரத்தை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான ரூ.461 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மாநிலங்களவையில் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: தற்போது உலக அளவிலான கவனம் மாமல்லபுரத்தின் மீது திரும்பியுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், கடந்த 2018 ஆகஸ்டில், நாட்டிலுள்ள 17 சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, புராதன சிறப்புமிக்க மாமல்லபுரத்தை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக சுற்றுலாத் துறை மேம்பாட்டு ஆலோசனைக் குழுவை நியமித்தது. அதன்மூலம் வரைவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.461 கோடி மதிப்பிலான திட்ட வரைவினை ஆலோசகர் குழு சுற்றுலாத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இத்திட்டத்துக்கான திட்ட அனுமதி இன்னும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. நாட்டின் பழம்பெருமையை உலகறியச் செய்யவும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கவும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.