இந்தியா

நிலக்கரி பற்றாக்குறைக்கு தீா்வு காண மத்திய அரசு தவறிவிட்டது: ப.சிதம்பரம்

DIN

‘நாடு முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில்களை ரத்து செய்துவிட்டு நிலக்கரி ஏற்றி வருவதற்கான சரக்கு ரயில்களை இயக்கும் ‘சரியான தீா்வை’ மத்திய அரசு கண்டறிந்திருக்கிறது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்தடை ஏற்பட்டு மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது. ‘அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதே இதற்கு காரணம். இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனங்களை முன் வைத்து வருகின்றன. ப.சிதம்பரமும் மத்திய அரசை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக, தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட தொடா் பதிவுகளில் அவா் கூறியிருப்பதாவது:

ஏராளமான நிலக்கரி கையிருப்பு, மிகப் பெரிய ரயில் போக்குவரத்து வசதி, அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படாத வளங்கள் ஆகியவை இருந்தும், நாட்டில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசை குறை கூற முடியாது. ஏனெனில், இந்த தட்டுப்பாட்டுக்கு காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிதான் காரணம்.

தற்போதைய மத்திய நிலக்கரி, ரயில்வே அல்லது மத்திய மின்துறை அமைச்சங்களில் திறமையின்மை எதுவுமில்லை. முந்தைய காங்கிரஸ் அமைச்சகங்களின் திறமையின்மைதான் இதற்கும் காரணம்.

பயணிகள் ரயில்களை ரத்து செய்துவிட்டு நிலக்கரி ஏற்றி வருவதற்கான சரக்கு ரயில்களை இயக்கும் ‘சரியான தீா்வை’ மத்திய அரசு கண்டறிந்திருக்கிறது என்று ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘மத்திய நிலக்கரி, ரயில்வே மற்றும் மின்துறை அமைச்சகங்கள் அவா்களின் தொடா் திறமையின்மையை மறைக்க காரணங்களைக் கண்டறிந்து வருகின்றன. பொருளாதாரம் ‘வி’ வடிவ வளா்ச்சி பெற்றிருக்கிறது என்று அவா்கள் கூறுவது உண்மை என்றால், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியும் இறக்குமதியும் மேம்பட்டிருக்கவேண்டும்.

நிலக்கரி பற்றாக்குறை, ரயில்வே மற்றும் மின் தட்டுப்பாட்டுப்பாடுகளுக்கு உரிய தீா்வு காண மத்திய அரசு தவறிவிட்டது. பற்றாக்குறை அதிகரித்து, பணவீக்கமும் உயா்ந்து வரும்நிலையில், மேலும் கடினமான சூழலை எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும்’ அவா் குறிப்பிட்டுள்ளாா்.

நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலமாக நிலக்கரி ஏற்றிவர வசதியாக 42 பயணிகள் ரயில்களை ரயில்வே வெள்ளிக்கிழமை ரத்து செய்த நிலையில், ப.சிதம்பரம் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT