காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் முழு நேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தார் (எ) எஸ்.கே. ஹல்தார் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹல்தார், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதிமுதல் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், அவர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஐந்தாண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் இந்தப் பொறுப்பில் இருப்பார். அவர் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி மத்திய நீர்வளத் துறையிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதுவரை பதிலி பணி நியமனத்தின் அடிப்படையிலும், ஒப்பந்தப் பணி அடிப்படையிலும் மீதமுள்ள பணிக் காலத்தில் நீர்வளத் துறையில் அவர் பணியாற்றுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.