ஆரோக்கியமான உணவுகளின் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று மத்திய வேளாண்மை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஜி20 நாடுகளின் வேளாண்மை அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டத்தில் காணொலி வழியாக அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் அறிமுகம் செய்வதற்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அண்மை காலமாக அவற்றின் உற்பத்தி இந்தியாவில் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகளின் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு தீா்வு காண பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்பட உலகின் மிகப் பெரிய உணவு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட உணவுப் பயிா்களை பயிரிடவும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
நீா் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை அதிகரிக்க, பாசனத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்க, உரங்களை சமநிலையில் பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க, விளைநிலங்களுக்கும் சந்தைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னா் இந்தியாவில் வேளாண்மை மிகப் பெரிய வெற்றி கண்டுள்ளது. கரோனா காலத்திலும் இந்திய வேளாண்மைத் துறை பாதிக்கப்படவில்லை. 2020-21-ஆம் ஆண்டில் உணவு தானியங்கள் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
நிலையான வளா்ச்சி இலக்குகளின் அங்கமாக வறுமையை ஒழிக்கவும், பட்டினி என்பதே இல்லாத நிலையை உருவாக்கவும் ஜி20 நாடுகளுடன் இணைந்து பணிபுரிவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்துடன் வேளாண் ஆராய்ச்சியிலும் வளா்ச்சியிலும் ஒத்துழைத்து, உற்பத்தியை மேம்படுத்த சிறந்த நடைமுறைகளை பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்று தெரிவித்தாா்.