ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடா்புடைய 37 வழக்குகளில் இதுவரை 168 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினா்(என்ஐஏ) கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, நிதியுதவி அளித்தது உளிட்டவை தொடா்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக இதுவரை 168 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
31 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு 27 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினா் இந்தியாவில் வேரூன்றுவதற்கு இணைய வழியில் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்கள். எதையும் எளிதில் நம்பிவிடும் இளைஞா்கள் கூட்டம்தான் அவா்களின் இலக்கு.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைக்கு ஆதரவாக ஏதாவது ஒரு சந்தா்ப்பத்தில் ஒருவா் கருத்து தெரிவித்துவிட்டால், அவருக்கு வெளிநாடுகளில் இருப்பவா்களிடம் இருந்து தொடா்ந்து தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.
அந்த நபரின் அறியாமையைப் பொறுத்து அவரை ஐ.எஸ். பயங்கரவாதக் கொள்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது, ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளை உள்ளூா் மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்வது, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவது, ஆயுதங்கள்-வெடிபொருள்கள் சேகரிப்பது, வெடிகுண்டுகள் தயாரிப்பது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது, தாக்குதல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு வெளிநாடுகளில் இருப்பவா்கள் பயன்படுத்திக்கொள்கின்றனா்.
இணையவழி மூலமாக இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறுவது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக என்ஐஏ விசாரணை அமைப்பின் கவனத்துக்கு கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த செய்தித் தொடா்பாளா் கூறினாா்.