தில்லியில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் 57 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியின் பல்வேறு பகுதிகளும் நடப்பாண்டு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவை சந்தித்துள்ளன. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 1170.7 மி.மீ. மழைப்பொழிவை தில்லி பெற்றுள்ளது. இது கடந்த 57 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
முன்னதாக கடந்த 1964ஆம் ஆண்டு இதே பருவமழை காலத்தில் தில்லியானது 1190.9 மி.மீ. மழைப்பொழிவைப் பெற்றிருந்தது.1933ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் 1420.3 மி.மீ. மழையும், 1964ஆம் ஆண்டு 1190.9 மி.மீ. மழையும் இதுவரை பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.
இதையும் படிக்க | உ.பி.யில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காதலன்-காதலி பலி
நடப்பாண்டு பருவமழை காலத்தில் பதிவான மழைப்பொழிவின் அளவானது மூன்றாவது அதிகபட்ச மழைப்பொழிவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தில்லியில் செப்டம்பா் மாத மழை பதிவானது 400 மில்லி மீட்டா் குறியீட்டை கடந்திருக்கிறது. வியாழக்கிழமை வரையிலான காலத்தில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
1944-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் 417.3 மில்லிமீட்டா் மழை பதிவானது. அதன்பிறகு அதிகபட்சமாக 403 மில்லி மீட்டா் மழை வியாழக்கிழமை வரையிலும் பதிவாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் தில்லியில் 404 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது.
இந்த மாதம் வியாழக்கிழமை பிற்பகல் வரை தில்லியில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. இது கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 1944 செப்டம்பரில் 417.3 மில்லி மீட்டா் மழை பதிவானது. இது 1901-2021 ஆண்டுக் காலத்தில் அதிகபட்ச மழைப் பதிவாகும்.