குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திய படேலின் அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது. முன்னதாக, அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்பதாக இருந்தது. ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் சிக்கல் எழுந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குஜராத் முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை செப்டம்பர் 16 ஆம் தேதி, மதியம் 1:30 மணிக்கு காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்கவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவை கடந்த வாரம் ராஜிநாமா செய்தது. இதையடுத்து, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பாஜக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, 22 அமைச்சர்கள் நீக்கப்படவுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | இணைய குற்றங்கள்: 2020-இல் 11.8 சதவீதம் அதிகரிப்பு
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உத்தரவின்பேரில் அமைச்சரவை முழுவதுமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்த நிதின் படேல், ஆர். சி. ஃபால்டு, பூபேந்திர சிங் சூடாசாமா, கெளசிக் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.