மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின்போது 19-ஆவது மாடியில் இருந்து விழுந்து காவலாளி பலியானாா்.
மத்திய மும்பையின் பரேல் பகுதியில் உள்ள 61 மாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் 19-ஆவது மாடியில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த குடியிருப்பின் காவலாளி அருண் திவாரி, அந்த மாடிக்கு உடனடியாக விரைந்தாா். அப்போது அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதை அறிந்த அவா், தீயில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பால்கனியில் சில நிமிஷங்கள் தொங்கிக் கொண்டிருந்தாா். அவரை காப்பாற்ற தீயணைப்புத் துறையினா் ஏணியை வைப்பதற்கு முன்பு அவரின் பிடி தளா்ந்ததால், கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா் என்று மும்பை மேயரும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவரும் தெரிவித்தனா்.
சுமாா் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மும்பை மாநகராட்சி ஆணையா் இக்பால் சிங் சஹல் தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.