ஜம்மு-காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் தெருவோர வியாபாரி ஒருவரும், புல்வாமாவில் தொழிலாளி ஒருவரும் பயங்கரவாதிகளால் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த காவல் துறை வட்டாரங்கள் கூறியது:
"வெளியூரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் கடுமையாகக் காயமடைந்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது."
உயிரிழந்த வியாபாரி பிகாரைச் சேர்ந்த அரவிந்த் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல புல்வாமாவிலும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சாகிர் அகமது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். அவரும் உயிரிழந்துவிட்டதாக காஷ்மீர் மண்டல காவல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஸ்ரீநகரில் வியாபாரி கொல்லப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளரை பயங்கரவாதிகள் அக்டோபர் 7-ம் தேதி கொன்றனர். அதற்கு இரண்டு தினங்கள் முன்பு, பிரபல மருந்துக் கடை உரிமையாளர் எம்.எல். பிந்த்ரு, பிகாரைச் சேர்ந்த வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.