கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை செவ்வாய்க்கிழமை அதிகாலை எட்டியது.
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 142 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2,710 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாக இருந்தது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணிக்கு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்தை எட்டியதும், பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை, தேக்கடி பொதுப்பணித்துறையின் நீர் வளத்துறை உதவி பொறியாளர் பி.ராஜகோபால் அறிவித்துள்ளார்.
பெரியாறு அணைப் பகுதியில் 12.2 மில்லி மீட்டர் மழையும் 29.4 மி.மீ., மழையும் பெய்தது.
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை, 56.5 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தது, இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டு, காட்டு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுருளியாறு, சுரங்கனாறு, வறட்டாறு ஆகிய பகுதிகளில் வெள்ள பெருக்கு தண்ணீர் முல்லைப் பெரியாற்றில் சேர்ந்தது, இதனால் முல்லைப் பெரியாற்றில் ஏற்கனவே அணையிலிருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறந்த நிலையில், கூடுதலாக தண்ணீர் சேர்ந்து முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு மாவட்ட வருவாய் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.