புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 9.42 சதவீதமாக குறைந்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது, மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.
நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று 2,95,955 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2.43 கோடியாக உள்ளது.
கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருந்தது. ஆனால் இன்று 2.08 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 4,157 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.
இன்று காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24.95 லட்சமாக உள்ளது.