தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநில முதல்வர் பிரமோந்த் சாவந்த் நேரில் ஆய்வு செய்தார்.
தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் கொள்கலனில் இருந்து திடீரென ஆக்சிஜன் வாயு கசியத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதி வெண்புகை மண்டலமாகக் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டதைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஆக்சிஜன் கசிந்து விபத்து ஏற்பட்ட தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் மாநில முதல்வர் பிரமோந்த் சாவந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபத்து குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் விநியோகத்தில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.