பெங்களூருவிலுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறைகளில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிரடி சோதனை மேற்கொண்டார்.
கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், முதல்வர் எடியூரப்பா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள மகாடி பகுதியில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற எடியூரப்பா, கரோனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
''ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் இன்று காலை 120 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் பெறப்பட்டது. இது போன்று சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைத்தால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்படாது. ஆக்ஸிஜன் தேவை குறித்து தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறேன். பிரதமரிடமும் ஆக்ஸிஜன் தேவையை எடுத்துரைத்துள்ளேன். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்'' என்று கூறினார்.