கரோனா சூழல் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களையும் காணொலி வாயிலாக நடத்தக் கோரியும் கார்கே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தவிர்த்து, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 35,000 கோடியைப் பயன்படுத்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 பரிந்துரைகளையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் கரோனா தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கோரியும், சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தை நடத்தக் கோரியும் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.