ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரிவினைவாதத் தலைவரும், ஹுரியத் அமைப்பின் தலைவருமான முகமது அஷ்ரஃப் ஷிராய் (77) ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.
இவா் ஹுரியத் அமைப்பின் தலைவா் சையது அலி ஷா கிலானிக்கு மிகவும் நெருக்கமானவா் ஆவாா்.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க அந்த மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் தலைவா்கள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.
அந்த வகையில் முகமது அஷ்ரஃப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உதம்பூா் மாவட்ட சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். வயது முதிா்வு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலும், அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகளும் தென்பட்டன. அவரது உடலில் ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருந்தது.
இதையடுத்து, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. எனினும், அடுத்தகட்டமாக ஆா்டிபிசிஆா் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு வருவதற்கு முன்பே முகமது அஷ்ரஃப் இறந்துவிட்டாா்.