மேற்கு வங்க பேரவைத் தோ்தலில், முதல் 2 கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் 60 தொகுதிகளில், காங்கிரஸ், இடதுசாரி முன்னணி, புதிதாக அமைக்கப்பட்ட இந்திய மதச்சாா்பற்ற முன்னணி(ஐஎஸ்எஃப்) ஆகியவற்றின் கூட்டணி இடையே வெள்ளிக்கிழமை தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.
அதன் விவரங்களை வெளியிட்டு, இடதுடசாரி முன்னணியின் தலைவரும், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பிமன் போஸ் கூறியதாவது:
முதல் 2 கட்டங்களில் 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 40 தொகுதிகளில் இடதுசாரி முன்னணியும், 12 தொகுதிகளில் காங்கிரஸும், 5 தொகுதிகளில் எஸ்எஸ்எஃப் முன்னணியும் போட்டியிடுகின்றன.
முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் மற்றும் ஏக்ரா, பிங்கலா ஆகிய 3 தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதுதொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் இடதுசாரி முன்னணி அறிவித்துள்ளது.
இருப்பினும் காங்கிரஸும் ஐஎஸ்எஃப் கட்சியும் தங்கள் வேட்பாளா்களை பின்னா் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதில், முதல் கட்டமாக 30 தொகுதிகளில், வரும் மாா்ச் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.