மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடையப்போவதாக அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் பாஜக வேட்பாளராக சுவேந்து அதிகாரி அறிவிக்கப்பட்டார்.
இதுபற்றி சுவேந்து கூறியது:
"நந்திகிராம் தொகுதி எனக்கு சவாலானது அல்ல. நந்திகிராமில் அவரைத் (மம்தா) தோற்கடித்து கொல்கத்தாவுக்குத் திருப்பி அனுப்பப்போகிறேன். எனக்கு பொறுப்பு வழங்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நந்திகிராம் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் தாமரை மலரச் செயல்படுவேன். 50 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடையப் போகிறார்.
அவர் பவானிபூரிலிருந்து ஓடியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அவரது வாக்குச் சாவடியை பாஜக கைப்பற்றியது. பவானிபூர் தொகுதியை பாஜக வெல்லும்."
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நீங்கள் முதல்வராக இருப்பீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்து அவர் கூறியது:
"பாஜகவில் தனிப்பட்ட நபரால் முடிவெடுக்கப்படாது. கட்சிக்கு ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருப்பேன். நாங்கள் ஒரு அணியாக செயல்படுகிறோம். அனுமானமான கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை."