மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மார்ச் 6) மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் குவிந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 100 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஹரியாணாவிலுள்ள விவசாயிகள் விவசாய போராட்டத்தில் 100-வது நாளை கருப்பு நாளாக அறிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான விவசாயிகள் குண்டிலி, சோனிப்பட் சாலைகளில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பலர் டிராக்டர்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் பேரணி மேற்கொண்டனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை ஓயமாட்டோம் என்று பாரதிய கிசான் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.