தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போதே, தேர்தல் நடத்தை விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதலே நடத்தை விதிகள் அமலாவது வழக்கமாக மாறியுள்ளது.
தேர்தலில் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் பல்வேறு விதிகளே தேர்தல் நடத்தை விதிகள்.
இந்த தேர்தல் நடத்தை விதிகளில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார உரை, பொதுக் கூட்டம் நடத்துவது, தேர்தல் அறிக்கை என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளில் பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பான விதிகள் சொல்வது என்ன?
1. தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தான் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில், ஒரு அரசியல் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றால், அது பற்றி முன்கூட்டியே அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்து முன் அனுமதி பெற வேண்டும்.
காவல்துறை அனுமதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடவும் வகை செய்கிறது.
2. ஏதேனும் தடை செய்யப்பட்ட பகுதி அல்லது கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் போதும் அரசியல் கட்சிகள் காவல்நிலையத்தில் முன்கூட்டியே தகவல் அளித்து உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
3. பொதுக்கூட்டத்தில் ஒலிப்பான்கள் அல்லது இதர வசதிகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டால் அது குறித்தும் காவல்நிலையத்தில் தெரிவித்து அனுமதி பெற வண்டும்.
4. பொதுக்கூட்டத்தில் யாரேனும் தொல்லை கொடுத்தால், பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நபர், அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் தெரியப்படுத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேத் தவிர, தாங்களாகவே யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.