தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து தனது திறனை இந்தியா உலக அரங்கில் பறைசாற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முக்கிய நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. ஏனெனில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த வைரஸால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.
கரோனா வைரஸ் வெவ்வேறு வகைகளில் புதிதாக உருவெடுத்துள்ளதால் இப்போது நிச்சயற்ற சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து தயாரித்து உலக அளவில் உற்பத்தியாளராக இருப்பதற்கான தனது திறனை இந்தியா நிலைநாட்டியுள்ளது.
தடுப்பூசியின் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கான வழிகள் ஏராளமாக உள்ளன. அதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறையில் சிந்திப்பது மிகவும் அத்தியவசியமான தேவையாகும் என்றாா் அவா்.