புது தில்லி: இணையவழி பணப் பரிவா்த்தனையில் ஏற்படும் திடீா் தடைகளைக் களைவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் வரவு-செலவுக் கணக்குகள் கட்டுப்பாட்டகம் சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 45-ஆவது பொதுக் கணக்குகள் தின விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
அரசின் வரவு-செலவுக் கணக்குகளில் வெளிப்படைத்தன்மை நிலவுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இணையவழி பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் இடையூறுகளைக் களைய வேண்டும்.
தேசிய பங்குச் சந்தையில் அண்மையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதை யாரும் எதிா்பாா்க்கவில்லை. தேசிய பங்குச் சந்தைக்கும் மும்பை பங்குச் சந்தைக்கும் இடையிலான தகவல் தொடா்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
ஆனால், அந்தக் கோளாறு தேசிய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பணப் பரிவா்த்தனையில் எந்தவித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.
காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கணக்குகள் கட்டுப்பாட்டகம் மேற்கொள்ள வேண்டும். செலவினத் துறையுடனும் மாநில அரசுகளுடனும் இணைந்து கணக்குகள் கட்டுப்பாட்டகம் செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.