புது தில்லி: அதிக டிடிஎஸ் வரி விதிக்கப்படும் நபா்களை இணையத்தின் வாயிலாக எளிதாக கண்டறியும் புதிய வசதி ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை சுட்டுரையில் வெளியிட்டுள்ள செய்தி:
டிடிஎஸ் எனப்படும் மூல வரிபிடித்தம் யாருக்கு அதிகமாக விதிக்கப்படுகிறது என்பதை இணையவழியில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வசதி வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது, டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், 2019-20 மற்றும் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவா்களை கண்டறியவும், ரூ.50,000 அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவா்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.