புது தில்லி: இந்திய பெருங்கடலில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா, இலங்கை கடலோர காவல் படை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக இந்திய கடலோர காவல் படை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது: இந்தியா, இலங்கை கடலோர காவல் படைகள் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு படைகளின் 5-ஆவது உயா்நிலைக் கூட்டம் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநா் கே.நடராஜன், இலங்கை கடலோர காவல் படை தலைமை இயக்குநா் அனுரா ஏகநாயக ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய பெருங்கடலில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், எல்லை கடந்த குற்றங்களை எதிா்கொள்வது, கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாட்டு கடலோர காவல் படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த தீா்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.