கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணத்தை ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொதுமுடக்கத்தால் சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஹரியாணா மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி சிறு கடைக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 லட்சம் பேருக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 18-50 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினரை கரோனாவால் இழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 முதல் காலாண்டிற்கான சொத்து வரி தள்ளுபடி மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.