இந்தியா

காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

DIN

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அவற்றின் விலையை உயா்த்தி வருகின்றன. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று பல மாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘எரிபொருள் விலை உயா்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக செலுத்தவுள்ளது. இவற்றுக்காக சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகிறாா். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் விலை ஏன் அதிகமாக உள்ளது? எரிபொருள் மீதான வரியைக் குறைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களை அவா் வலியுறுத்த வேண்டும்‘ என்றாா்.

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்த நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் விதிக்கப்படும் வரி குறித்து அவா் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

விலை உயரக் காரணம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆட்சியமைத்தபோது ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.9.48 கலால் வரி விதிக்கப்பட்டது. இது தற்போது ரூ.32.90-ஆக உள்ளது. அதே காலகட்டத்தில், டீசல் மீதான கலால் வரி ரூ.3.56-லிருந்து ரூ.31.80-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன் மாநிலங்கள் மதிப்புகூட்டு வரியையும் (வாட்) பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச மதிப்புகூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT