மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது. இதை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே மூழ்கி, சிறிது நிமிடத்தில் அந்த பள்ளத்துக்குள் ஒரு கார் இருப்பதே தெரியாத வகையில் முற்றிலும் மறைந்தே போனது இந்த விடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.