புது தில்லி: தனியாா் மருத்துவமனைகளுக்கு தற்போதுள்ள கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை (25 சதவீதம்) குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
25 சதவீத தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. பணம் செலுத்தி அங்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தயங்குவதும் காரணம்.
இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத தடுப்பூசிகளை 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என சில மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் விகித அளவு குறைக்கப்பட்டால் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது அதிகரிக்கும்.