தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7,442 வழக்குகள் பதியப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதி வரையிலான 106 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 18 லட்சத்து 48,503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 7,442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதி வரை 89,446 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.