திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத் தொழிலாளிகள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வெங்கடய்யா கூறியது:
திருப்பதி அருகே சேஷாசல வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் அதிரடிப் படையினா் இரு குழுக்களாக இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் பாக்கராபேட்டை வனப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவரையும் புதன்கிழமை அதிகாலை இருவரையும் கைது செய்தனா்.
இந்த நால்வரும் செம்மரம் வெட்ட வந்ததாக விசாரணையின்போது ஒப்புக் கொண்டனா். அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மரம் வெட்ட பயன்படுத்தும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ராமசாமி, கணமலையைச் சோ்ந்த குப்பன், நம்மிபட்டு கிராமத்தைச் சோ்ந்த குமாா், சின்னப்பன் என்பது தெரிய வந்தது.
அவா்களை செம்மரம் வெட்ட அனுப்பியதாக சிவாஜி, பெருமாள் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.