தில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திலிருந்து விலகுவதாக ஒரு விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.
இதுபற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த வி.எம். சிங் கூறியது:
"வேறு ஒரு நோக்கத்துடன் இருப்பவர்களுடன் எங்களால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்திலிருந்து ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கதன் விலகுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால், இது மாதிரியான போராட்டம் என்னுடன் தொடராது. நாங்கள் உயிர் தியாகம் செய்யவோ அடி வாங்கவோ இங்கு வரவில்லை.
இது அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவல்ல. ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கதனின் முடிவு. இது ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கதனின் விஎம் சிங் மற்றும் நிர்வாகிகளின் முடிவு."
ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கதனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விஎம் சிங்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் நீட்சியாக செவ்வாய்க்கிழமை மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஆனால், அந்தப் பேரணி வன்முறையில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, வரும் 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.