தில்லியில் சட்டம் -ஒழுங்கு நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.
அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து வேறு வழிகளில் விவசாயிகள் சென்றதால் காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். இதனால் தில்லி முழுவதும் வன்முறைக் களமாக காட்சி அளிக்கிறது.
விவசாயிகளின் பேரணியைத் தடுக்கும்பொருட்டு, முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைய சேவை துண்டிப்பு, 144 தடை உத்தரவு என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.